Wednesday 25 June 2014

உவமைக் கவிஞர் சுரதா !

உவமைக் கவிஞர் சுரதா !

சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். தஞ்சை மாவட்டம் பழையனூர் (சிக்கல்) என்னும் ஊரில் நவம்பர் 23, 1921-ல் பிறந்தவர்.  பெற்றோர் திருவேங்கடம், சண்பகம் அம்மையார் ஆவர். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.

சுரதாவின் படைப்புகள் :-

தேன்மழை (கவிதைத் தொகுப்பு, 1986)
துறைமுகம் (பாடல் தொகுப்பு, 1976)
சிரிப்பின் நிழல் (பாடல் தொகுப்பு)
சுவரும் சுண்ணாம்பும் (பாடல் தொகுப்பு, 1974)
அமுதும் தேனும், 1983
பாரதிதாசன் பரம்பரை (தொ.ஆ), 1991
வினாக்களும் சுரதாவின் விடைகளும்
உதட்டில் உதடு
எச்சில் இரவு
எப்போதும் இருப்பவர்கள்
கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்
சாவின் முத்தம்
சிறந்த சொற்பொழிவுகள்
சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு)
சுவரும் சுண்ணாம்பும்
சொன்னார்கள்
தமிழ்ச் சொல்லாக்கம்
தொடாத வாலிபம்
நெஞ்சில் நிறுத்துங்கள்
பட்டத்தரசி
பாவேந்தரின் காளமேகம்
புகழ்மாலை
மங்கையர்க்கரசி
முன்னும் பின்னும்
வார்த்தை வாசல்
வினாக்களும் சுரதாவின் விடைகளும்
வெட்ட வெளிச்சம்

சுரதாவின் சிறப்புகள் :-

1969 இல் தேன்மழை என்ற சுரதாவின் கவிதை நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது.

1972 இல் தமிழக அரசு சுரதாவுக்குக் கலைமாமணி என்னும் விருது வழங்கிச் சிறப்பித்தது.

1978 இல் ம.கோ.இரா. தலைமையில் அமைந்த அரசு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கிச் சிறப்பித்தது.

தமிழக அரசு சுரதாவின் நூல்களை நாட்டுடைமையாக்கி அவர் குடும்பத்திற்குப் பத்து இலட்சம் உரூவா பரிவுத்தொகை வழங்கியுள்ளது(2007).

1982 இல் சுரதாவின் மணிவிழாவையொட்டி நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் நடந்த விழாவில் ரூபா அறுபதாயிரம் பரிசாகத் தரப்பெற்றது.

1982 இல் சுரதாவின் கவிதைப் பணிகளைப் பாராட்டிக் குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடந்த விழாவில் கவியரசர் பட்டம் வழங்கப்பட்டது.

1987 இல் மலேசியாவில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டிற்குச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பெற்றார்.

1990 இல் கலைஞர் அரசு பாரதிதாசன் விருதினைச் சுரதாவுக்கு வழங்கியது.

1990 இல் கேரளாவில் மகாகவி குமரன் ஆசான் விருது சுரதாவுக்குக் கிடைத்தது.

சுரதாவின் தேன்மழை நூலுக்குத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ரூபா ஒரு இலட்சம் இராசராசன் விருது வழங்கப்பட்டுள்ளது.

29.09.2008 இல் சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுரதாவுக்கு நினைவுச்சிலை நிறுவப்பட்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப் பெற்றுள்ளது. 

சுரதாவின் கவிதைகள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன. சுரதாவின் கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

சுரதாவின் முதல் நூல் சாவின் முத்தம். இதனை வி.ஆர்.எம்.செட்டியார் என்பவர் 1946 மார்ச்சு மாதம் வெளியிட்டார். 1956 இல் பட்டத்தரசி என்ற சிறு காவிய நூலை வெளியிட்டார். 1954 இல் கலைஞர் கருணாநிதியின் முரசொலி இதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தார்.

1955 இல் காவியம் என்ற வார இதழைத் தொடங்கினார். இவ்விதழைத் தொடர்ந்து இலக்கியம்(1958), ஊர்வலம்(1963), விண்மீன்(1964), சுரதா(1988) எனக் கவிதை வளர்ச்சிக்குப் பல இதழ்களை வெளியிட்டார்.

1971 ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் இதழில் சுரதா திரைப்பட நடிகைகளின் அகவாழ்க்கையைப் பற்றி எழுதிய கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. பின்னாளில் இக்கவிதைகள் தொகுக்கப்பட்டு சுவரும் சுண்ணாம்பும் என்னும் பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது(1974).

பாரதிதாசனின் தலைமாணாக்கராகக் கருதத்தகும் கவிஞர் சுரதா அவர்கள் பல நூல்களாக இருந்த பாவேந்தர் கவிதைகளை ஒரே தொகுப்பாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுத் திருவாசகன், கல்லாடன் பெயரில் அந்த நூல் வெளிவரக் காரணமானார். உலகின் அரிய செய்திகளைப் பட்டியலிட்டுக் காட்டும் சுரதா இல்லத்தில் அரிய நூல்கள் கொண்ட நூலகத்தை உருவாக்கினார்.

தமிழ், கவிதை, புகழ் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட புரவலர்கள், ஆர்வலர்கள் ஆகியோரை இணைத்துச் சில வினோதக் கவியரங்கங்களை நடத்துபவராக இருந்தார் சுரதா. படகுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம், விமானக் கவியரங்கம் முதலியவை அவை. கவியரங்குகளைக் கொண்டாட்ட நிகழ்வாக மாற்றியதில் அவருக்கு மிகுந்த பங்குண்டு.

பாவேந்தர் தலைமையில் இயங்கிய தமிழ்க்கவிஞர் பெருமன்றத்திற்கு 1966 இல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார்.

சுரதாவின் மறைவு :-

சுரதா தன்னுடைய 84ம் வயதில் 20.06.2006 இல் சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார்.  சுரதாவுக்குச் சுலோசனா என்ற மனைவியும், கல்லாடன் என்ற ஒரே மகனும் உள்ளனர். இவரின் மருமகள் பெயர் இராசேசுவரி கல்லாடன். பெயரர்கள் இளங்கோவன், இளஞ்செழியன் என இருவர்.

No comments:

Post a Comment